செய்திகள்

கிரானைட் நிறுவனத்தின் ரூ.38 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2018-03-02 04:27 GMT   |   Update On 2018-03-02 04:27 GMT
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கிரானைட் நிறுவனத்தின் ரூ.38 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
புதுடெல்லி:

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் பெரியகருப்பன், பாலகிருஷ்ணன், சுப்பையா ஆகியோர் நடத்தி வந்த குமார் கிரானைட்ஸ் மற்றும் குமார் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்த 2 நிறுவனங்களும் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் இடங்களில் அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. மேலும் போக்குவரத்திற்காக போலியான ஆவணங்கள் தயாரித்து கிரானைட் கற்களை இடமாற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் அதிக அளவில் அசையா சொத்துகளை வாங்கி உள்ளனர்.

எனவே பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் மற்றும் அந்த நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் 158 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.37 கோடியே 79 லட்சம் ஆகும்.

இந்த தகவல் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News