செய்திகள்

பணமதிப்பிழப்பை தொடர்ந்து வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை

Published On 2018-02-04 01:16 GMT   |   Update On 2018-02-04 01:16 GMT
பணமதிப்பிழப்பை தொடர்ந்து வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பணமதிப்பிழப்பை தொடர்ந்து வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு ஏராளமானோர் வங்கியில் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்தனர். அவ்வாறு அதிகமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

இதுகுறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்ததாக 1.98 லட்சம் கணக்குகளை கண்டுபிடித்துள்ளோம்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. தொடர்ந்து நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடந்த 3 மாதங்களில் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு, தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்தது உள்ளிட்ட தவறுகளை செய்த 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறையை டிஜிட்டல் மயமாக்க முயற்சி செய்து வருகிறோம். புதியதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக இணையதளம் மூலம் தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை 60 ஆயிரம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இது படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News