செய்திகள்

அமேதி தொகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்: ராகுல் காந்தி நடத்தினார்

Published On 2018-01-16 09:29 GMT   |   Update On 2018-01-16 09:29 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சியின் மூலம் இன்று கேட்டறிந்தார். #RahulGandhi #Amethi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று லக்னோ நகரை வந்தடைந்தார். முன்சிகஞ்ச் பகுதியில் இன்று பொதுமக்களின் குறைகளை ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சியின் மூலம் கேட்டறிந்தார்.

அப்போது, அவரை சந்தித்த கிஸாட்முல் என்ற பெண்மணி சக்கர நாற்காலியில் தனது நோயாளி மகனை அழைத்துவந்து அவரது மருத்துவ செலவுகளுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார். அவருக்கு ஆறுதல் கூறிய ராகுல், ‘கவலைப்படாதீர்கள் அம்மா! அவருக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன், குணமடைந்து விடுவார்’ என்று தெரிவித்தார். 

நூற்றுக்கும் அதிகமானவர்களின் குறைகளையும், குமுறல்களையும் பொறுமையாக கேட்டறிந்த அவர், அங்கிருந்து முசாபிர்கானா பகுதிக்கு புறப்பட்டு சென்றார். முசாபிர்கானாவில் இருந்து சாலை வழியாக கவுரிகஞ்ச் மற்றும் ஜய்ஸ் பகுதிக்கு செல்லும் ராகுல் அங்கு தெருமுனை கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

ஜகதீஷ்பூர் மற்றும் மோகன்கஞ்ச் பகுதிகளையும் பார்வையிடும் ராகுல் காந்தி கவுரிகஞ்ச் ஹனுமான் ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்.

இன்று மாலை 4 மணியளவில் லக்னோ நகரை வந்தடையும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #RahulGandhi #Amethi #tamilnews
Tags:    

Similar News