செய்திகள்

குஜராத் முதல்வராக விஜய் ருபானி நாளை பதவியேற்பு - பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Published On 2017-12-25 18:33 IST   |   Update On 2017-12-25 18:33:00 IST
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் மந்திரி விஜய் ருபானி தலைமையிலான புதிய மந்திரிசபை நாளை பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி விஜய் ருபானி தலைமையிலான புதிய மந்திரிசபை நாளை காலை 11 மணியளவில் பதவியேற்கிறது. இதன் மூலம் அங்கு ஆறாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. தற்போதைய முதல்வர் விஜய் ருபானி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வரை தேர்வு செய்ய அருன் ஜெட்லி மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில், சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் ருபானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை தலைவராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார்,

தற்போது ராஜ்கோட் மேற்கு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானி, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

முந்தைய அமைச்சரவையில் இருந்த பல மந்திரிகள் அப்படியே தொடர்வார்கள் என்றும், புதிய எம்.எல்.ஏக்களுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 
இந்நிலையில், முதல் மந்திரி விஜய் ருபானி தலைமையிலான புதிய மந்திரிசபை நாளை பதவியேற்கிறது. காந்திநகர் சச்சிவாலயா திடலில் காலை 11.20 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த காலங்களில் குஜராத் முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி, ஆனந்தி பென் மற்றும் முதல் முறை முதல் மந்திரியாக பதவியேற்ற விஜய் ருபானி ஆகியோர் சுபமுகூர்த்த நேரமான பகல் 12.39 மணிக்கு பதவி பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வழக்கத்துக்கு மாறாக தற்போது முதல் முறையாக 11.20 மணியளவில் பதவி ஏற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை காலை டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வரும் பிரதமர் மோடி, இவ்விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களுடன் இங்குள்ள மஹாத்மா மந்திரில் மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Similar News