செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

Published On 2017-10-31 02:10 GMT   |   Update On 2017-10-31 02:36 GMT
சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் என்ற ஊரில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரிட்டீசாருக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.

இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். காந்தியடிகளின் சத்யாகிரக போராட்டங்களில் கலந்து கொண்டார். தைரியமாக வெள்ளையர்களை எதிர்த்து  சிறை சென்றவர். 1947ல் இருந்து 1950 வரை இந்தியாவின் துணைப்பிரதமராக இருந்தவர். 1948-ல் இருந்து 1950 வரை உள் துறை அமைச்சராக இருந்தவர்.



சுதந்திர இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நிலையில், அதை ஒருங்கிணைத்து ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்கியதில் இவருக்கும் முக்கிய பங்கு இருப்பதால் எல்லோராலும்  இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர்.

இந்நிலையில், அவரது பிறந்த தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News