செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கின் மறு விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2017-10-30 13:12 GMT   |   Update On 2017-10-30 13:18 GMT
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் நடத்திவரும் விசாரணை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது.

சசிகலா சிறைக்கு சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு கடந்த 16-ந் தேதி 2-வது கட்ட விசாரணை நடைபெற்றது. இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன்பின்னர், விசாரணையை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இரு அணிகளின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் ஆஜராகினர். பின்னர் இவ்வழக்கின் மறுவிசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பி.எஸ். - எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பில் விளக்கங்களை அளித்து வாதாடினார்கள். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6 மணிவரை நீடித்தது.

பின்னர், இவ்வழக்கின் மறு விசாரணை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News