செய்திகள்

மத்திய அரசுக்கு சொந்தமாக 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம்: ரெயில்வேக்கு அதிக இடம்

Published On 2017-10-30 08:50 GMT   |   Update On 2017-10-30 08:50 GMT
இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு 13 ஆயிரத்து 505 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நிலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ரெயில்வே அமைச்சகத்துக்கு அதிக இடம் உள்ளது.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு உள்ளது என்ற தகவல் தொகுக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அமைச்சகம் மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு “அரசு நிலம் தகவல் முறை” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை 51 மத்திய அமைச்சகங்களில் 41 அமைச்சகமும் 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 22-ம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நில விபரத்தை கொடுத்துள்ளன. இவற்றை தொகுத்தபோது மத்திய அரசுக்கு 13 ஆயிரத்து 505 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நிலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அனைத்துத் துறைகளும் சொத்துக்கள் பற்றிய விவரத்தை கொடுத்த பிறகு, மத்திய அரசுக்கு சொந்தமான நிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். தற்போது கிடைத்துள்ள கணக்குபடி டெல்லி மாநிலத்தின் அளவைப் போல 9 மடங்கு அளவுக்கு மத்திய அரசுக்கு நிலம் சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்களில் மற்ற அனைத்துத் துறைகளையும் விட ரெயில்வே அமைச்சகத்துக்கு அதிக இடம் உள்ளது. அந்த அமைச்சகத்துக்கு சுமார் 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இடம் உள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 384 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இடங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சும்மா கிடக்கும் மத்திய அரசின் காலி இடங்களை தனியாருக்கு வாடகைக்கு விட்டு வருவாயை அதிகரிக்க செய்ய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் காலி நிலங்களை உபயோகமான முறையில் வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பொது மக்களும் கருத்து தெரிவித்து கடிதங்கள் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News