செய்திகள்

பஞ்சாப் எல்லைப்பகுதியில் ரூ.53 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

Published On 2017-08-30 23:44 GMT   |   Update On 2017-08-30 23:44 GMT
பஞ்சாப் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சுமார் 53 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அமிர்தசரஸ்:

இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் அருகேயுள்ள ஷம்ஸ்கி என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைப்பகுதியில் கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு கடத்தல் கும்பலும் பாதுகாப்பு படையினர் மீது திருப்பி சுட்டனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தப்பி விட்டனர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த இடத்தில் 10 பார்சல்கள் கிடந்தன. அதை அவர்கள் திறந்து பார்த்த போது ஹெராயின் என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். மொத்தமாக 10.740 கிலோ அளவிலான போதைப்பொருளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.53 கோடியாகும்.
Tags:    

Similar News