செய்திகள்

எல்லை மீறிய பயம்: பேய் படம் பார்த்த மாணவர் தற்கொலை

Published On 2017-08-30 16:17 GMT   |   Update On 2017-08-30 16:17 GMT
கொல்கத்தாவில் திரையரங்கில் 'பேய்' படம் பார்த்த பயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள காலிகாட் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் சவுத்ரி. (வயது 17). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் பேய் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பயங்கர திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஸ்ரீஜன் சவுத்ரி தனது நண்பர்களுடன் 2 நாட்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்துவிட்டு வந்தார். அதில் இருந்தே அவர் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். இது சம்பந்தமாக பெற்றோர்கள் கேட்ட போதும் சரியாக பதில் சொல்லவில்லை.

இந்த நிலையில் வீட்டின் அறையில் ஸ்ரீஜன் சவுத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பேய் படத்தை பார்த்ததால் ஏற்பட்ட உச்சகட்ட பயத்தால் தான் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருடன் சென்று படம் பார்த்த சக நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.   
Tags:    

Similar News