செய்திகள்

சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவத்தை விலக்குமாறு சீனா மீண்டும் கோரிக்கை: இந்தியா ஏற்க மறுப்பு

Published On 2017-07-03 05:26 GMT   |   Update On 2017-07-05 12:17 GMT
சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவத்தை விலக்குமாறு சீனாவின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் இந்தியா - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தபடி உள்ளது.

புதுடெல்லி:

இந்தியா - சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லைப் பகுதி உள்ளது.

இதில் 220 கிலோ மீட்டர் தூரம் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

சிக்கிம் 1976-ம் ஆண்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியது. அங்கு சிக்கிம், பூடான், திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் பகுதி உள்ளது. அதை டோகாலாம் என்று பூடான் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் சீனா அதை “டோங்லாங்” என்று பெயரிட்டு அழைத்து வருகிறது.

இந்த பகுதியின் பெரும்பாலான இடங்கள் இந்தியா வசம் உள்ளது. சிறிய பகுதி சீன கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சீனா, அந்த பகுதியில் இந்தியாவின் இடத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. அங்கு இந்தியா 2 பதுங்கு குழிகளை அமைத்திருந்தது.

அந்த பதுங்கு குழிகளை அகற்றும்படி சீனா கூறியது. அதை ஏற்க இந்தியா மறுத்தது. இதையடுத்து கடந்த மாதம் 6-ந்தேதி அந்த பதுங்கு குழிகளை சீனா இடித்துத் தள்ளியது.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு அந்த எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்தது. 1962-ம் ஆண்டு போருக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் மோதல் போக்குடன் நீண்ட நாட்கள் எல்லையில் நேருக்கு நேர் ஆவேசத்துடன் நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இந்தியாவும், சீனாவும் பேச்சு நடத்தின. அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பேச்சு தோல்வி அடைந்ததால் சீனாவுடனான கொள்கைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் கடந்த ஒரு மாதமாக வீரர்களை நிறுத்தியுள்ளது. நேற்று இந்தியா கூடுதல் வீரர்களை சிக்கிம் எல்லைப் பகுதிக்கு அனுப்பியது. இது சீனாவிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனா நேற்று மீண்டும் கோரிக்கை விடுத்தது. சீன பத்திரிகைகளும் இந்திய படைகள் அகற்றப்பட்டால்தான் அந்த பகுதியில் அமைதி ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளன.

ஆனால் சீனாவின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் இந்தியா - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தபடி உள்ளது.

இதற்கிடையே டோங்லாங் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதாக கூறி 2 வரை படங்களை சீனா வெளியிட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் இந்திய பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருவது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இமாச்சல பிரதேசத்திலும், காஷ்மீரிலும் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தற்போது சிக்கிமில் உள்ள பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடுவதால் இந்தியாவுக்கு தலைவலி அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News