செய்திகள்

ராஜஸ்தானில் 6 மகள்கள் திருமணத்துக்கு ரூ.1½ கோடி வரதட்சணை கொடுத்த டீக்கடைக்காரர்

Published On 2017-04-13 05:45 GMT   |   Update On 2017-04-13 05:45 GMT
ராஜஸ்தானில் 6 மகள்கள் திருமணத்துக்கு ரூ.1½ கோடி வரதட்சணை கொடுத்த டீக்கடைக்காரருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டம் புகிவாடியை சேர்ந்தவர் லீலாராம்குஞ்ஜார். டீக்கடை நடத்திவருகிறார்.

இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்ய லீலாராம் குஞ்ஜார் முடிவு செய்தார். இதில் 4 மகள்கள் திருமண வயதை எட்டவில்லை. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.

திருமணத்தின் போது 6 மகளுக்கும் ரூ.1½ கோடி வரதட்சணையாக கொடுத்தார். அவை அனைத்தும் ரொக்கமாக கொடுத்தார். அவர் பணம் கொடுப்பது வீடியோவாக எடுக்கப்பட்டது. அது சமூக வலைதளங்களில் பரவியது. அவர் பணத்தை எண்ணி மணமகன்கள் குடும்பத்தினரிடம் கொடுப்பது பதிவானது.


இதை பார்த்த வருமான வரித்துறை லீலாராம் குஞ்ஜாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் ரூ.1½ கோடி ரொக்கம் எப்படி வந்தது? அதை சம்பாதித்தது எப்படி? அதற்கு கணக்கு காட்டுங்கள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

லீலாராம் குஞ்ஜார், மகள்கள் திருமண அழைப்பிதழில் 2 மகள்களின் பெயர்களை மட்டுமே அச்சிட்டு உள்ளனர். ஆனால் திருமணம் வயதை அடையாத மேலும் 4 மகள்களுக்கும் திருமணத்தை செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News