செய்திகள்

மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்பு

Published On 2017-03-15 00:40 GMT   |   Update On 2017-03-15 00:40 GMT
மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இம்பால்:

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. எனவே சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைகிறது.

சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தனர். இதையடுத்து, மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் 31 பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெயர்ப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரேன் சிங், சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து ஆளுநரை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரியதை அடுத்து, மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக சட்டபேரவை தலைவர் பிரேன் சிங்குக்கு அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து, இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் மணிப்பூரின் அடுத்த முதல்வராக பிரேன் சிங் பதவியேற்க உள்ளார். இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் விழாவில் அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா பிரேன் சிங்குக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரி வருவதால் அடுத்த வாரம் அவர் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி நஜ்மா ஹெப்துல்லா குறிப்பிடுகையில், “மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து எடை போடுகிற பொறுப்பை கவர்னருக்கு அரசியல் சாசனம் அளித்துள்ளது. அந்த வகையில் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளேன். தேர்தலில் காங்கிரஸ்தான் அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களை பெற்றது என்பதை நான் அறிவேன். ஸ்திரத்தன்மைதான் முக்கியம். புதிய அரசு 22 அல்லது 23-ந்தேதி பலத்தை நிரூபிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திகழ வேண்டும். பாரதீய ஜனதா பொறுப்புள்ள அரசை நடத்த வேண்டும்” என்று கூறினார். 

Similar News