செய்திகள்

குடியரசு தின நிறைவு விழா: பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பிரணாப், மோடி பங்கேற்பு

Published On 2017-01-29 13:03 GMT   |   Update On 2017-01-29 13:03 GMT
டெல்லியில் குடியரசு தின நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:

குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ந்தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

இதனையடுத்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் விதமாக டெல்லியில் விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படை பாசறை திரும்பும் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி பங்கேற்றனர். 

அப்போது, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். விஜய் சவுக் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண விளக்குகளால் கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சிக்கு குதிரை பூட்டிய வண்டியில் ஜனாதிபதி வந்தார்.



இந்த நிகழ்ச்சி மாலை 4.45 மணியளவி தொடங்கியது. மொத்தம் ராணுவத்தை சேர்ந்த பல்வேறு இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. படை தலைவர் ஜெயச்சந்திரன் இந்த நிகழ்ச்சியை நடத்தினார். சுபேதார் மேஜர் ராணுவ பேண்ட் 
வாத்தியங்களை ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் குதிரை பூட்டிய வண்டியில் ராணுவ மரியாதையுடன் தனது பாசறைக்கு ஜனாதிபதி திரும்பினார்.

Similar News