செய்திகள்

பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது-தனித்து போட்டி தான்: சிவசேனா திட்டவட்டம்

Published On 2017-01-27 02:28 GMT   |   Update On 2017-01-27 02:28 GMT
பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 186 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க. சிவசேனா இடையே கூட்டணி நீடித்து வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இருதரப்பினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், கட்சியின் 50 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீணாகி விட்டது. கூட்டணியில் வெறுப்பூட்டும் தன்மை ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்துத்துவா கொள்கைகளில் பா.ஜ.க.விற்கு ஆதரவு அளித்து வந்துள்ளோம். சிவசேனாவிற்கு பதவி பேராசை எதுவுமில்லை. சிவசேனாவை குறைத்து மதிப்பிட்டவர்கள் தேர்தலில் தோற்றுப்போவார்கள்” என்று தெரிவித்தார்.
 

Similar News