செய்திகள்

மாயாவதி கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி பணம் டெபாசிட்

Published On 2016-12-26 21:21 GMT   |   Update On 2016-12-26 21:21 GMT
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். கருப்பு பணம் ஒழிப்பதற்கு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தரப்பில் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கறுப்பு பணஒழிப்பின் இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்ததாக பினாமி சொத்துக்கள் குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமலாக்கத் துறை சார்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், ரூ.1.43 கோடி மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிக் கிளைகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News