செய்திகள்

வங்கி கணக்குகளை சமர்ப்பிக்கும்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் உத்தரவு

Published On 2016-11-29 09:00 GMT   |   Update On 2016-11-29 09:00 GMT
ரூ.500, 1000 ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வங்கிகளில் நடத்திய பணப் பரிவர்த்தனை விபரங்களை சமர்ப்பிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

கணக்கில் வராத பணத்துக்கு புதிய வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் வருமான வரி சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

‘வருமானத்தை மீறிய வகையில் சம்பாதித்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரியும் பத்து சதவீதம் அபராதமும், இதற்கான 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படும். இப்படி வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் இருந்து 25 சதவீதம் பிரதமரின் ‘கரிப் கல்யாண் ‘ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதியில் டெபாசிட் செய்யப்படும்’ என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் வராத டெபாசிட் தொகைக்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31 வரை பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வங்கிகளில் நடத்திய பணப் பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Similar News