செய்திகள் (Tamil News)

ரூ.37 ஆயிரம் கள்ளநோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவந்த பெண் கைது

Published On 2016-11-13 07:59 GMT   |   Update On 2016-11-13 07:59 GMT
அரபு நாட்டில் உள்ள மகன்கள் அனுப்பியதாக கூறி 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவந்த பெண்ணை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஏழை-எளிய மக்களையும், வியாபாரிகளையும் புரட்டிப் போட்டுவிட்டது

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடந்த 6 நாட்களாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கேரள மாநிலம், மலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மரியம்மா என்ற பெண், தன்னிடம் இருந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கொன்டோட்டி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளைக்கு நேற்று வந்திருந்தார்.

அவர் கொண்டு வந்திருந்த 49,500 ரூபாயில் 37 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள் மரியம்மாவை பிடித்து, இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று விசாரித்தனர்.

அதற்கு பதிலளித்த மரியம்மா, அரபு நாட்டில் வேலை செய்துவரும் தங்களது மகன்கள் (ஹவாலா மூலம்) தந்தனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News