செய்திகள்

பா.ஜனதாவினருக்கும்,முன் கூட்டியே தெரியும்-செல்லாத நோட்டு அறிவிப்பில் மிகப்பெரிய ஊழல்: கெஜ்ரிவால்

Published On 2016-11-12 07:08 GMT   |   Update On 2016-11-12 07:08 GMT
பா.ஜனதாவினருக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதால் செல்லாத நோட்டு அறிவிப்பை மோடி திரும்ப பெற வேண்டும் என்று கெஜ்ரிவால் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நாடு முழுவதும் மக்கள் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள். வங்கிகளிலும் போதிய அளவு பணம் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் மோடி அறிவிப்பை டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக குறை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.500, ரூ.1000, நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பே பா.ஜனதாவினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களை உஷார் படுத்தி உள்ளனர். அவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை முன் கூட்டியே மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

பஞ்சாப்பை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ஒருவருக்கு புதிய ரூ.2000 நோட்டுகள் அடங்கிய பண்டல்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இது போல் பலர் அமெரிக்க டாலர்களாகவும் தங்ககட்டிகளாகவும் மாற்றி விட்டனர். 3 மாதங்களில் மட்டும் பல ஆயிரம் கோடி பணம் மாற்றப்பட்டுவிட்டது.

பிரதமர் மோடியின் அறிவிப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது.

ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவரது அறிவிப்பால் எந்த கறுப்பு பணமும் வெளியே வரவில்லை. கறுப்பு பணம் முழுவதும் பலரது கைக்கு மாறி வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டு விட்டது.

எனவே பிரதமர் மோடி உடனடியாக தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News