செய்திகள்

செம்மர கடத்தலில் ஈடுபட்ட சென்னை பெண் வீட்டில் ரூ.50 கோடி நகை-பணம் பறிமுதல்

Published On 2016-11-12 12:01 IST   |   Update On 2016-11-12 12:01:00 IST
கணவர் சிறைக்கு சென்றதால் செம்மர கடத்தலில் ஈடுபட்ட சென்னை பெண் வீட்டில் ரூ.50 கோடி நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

சித்தூர்:

சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக சித்தூர் போலீசார் கைது செய்தனர்.

அவர், சித்தூர் மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து செம்மரங்களை கடத்தி சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்ததாக கூறினார்.

அவரை, சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர், சிறையில் இருந்தபடியே 2-வது மனைவி சங்கீதா (32) மூலமாக சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபடுவது தெரிய வந்தது. சங்கீதாவை பிடிக்க சித்தூர் போலீசார் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தனர். அவர்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சங்கீதாவை தேடினர்.

சங்கீதா, கொல்கத்தாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்தது. சித்தூர் சிறப்புப்படை போலீசார் கொல்கத்தா சென்று சங்கீதாவை பிடிக்க முயன்றனர். இதை அறிந்த சங்கீதா வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ரூ.50 கோடிக்கும் மேலான தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சித்தூருக்குக் கொண்டு வந்தனர். சங்கீதாவுக்கு துணையாக லட்சுமணனின் தம்பி ரமேஷ் (36) தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ரமேஷ் உதவியோடு சங்கீதா சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தலைமறைவான சங்கீதா, ரமேஷ் ஆகியோரை சித்தூர் சிறப்புப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News