செய்திகள்
வனராஜ்

திருவனந்தபுரத்தில் 6 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தை சேர்ந்தவர் கைது

Published On 2016-10-17 10:41 GMT   |   Update On 2016-10-17 10:41 GMT
திருவனந்தபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்க முயன்ற 6 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாகவும் கஞ்சா கும்பல் பள்ளி, கல்லூரி மாணவர்களை கஞ்சா பழக்கத்துக்கு அடிமைப்படுத்துவதாகவும் பல்வேறு புகார்கள் போலீசாருக்கு சென்றது.

மேலும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கவனத்திற்கும் இதுபற்றி கொண்டுசெல்லப்பட்டது.

இதைதொடர்ந்து கஞ்சா கும்பலை பிடிக்க டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின்பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

இந்த போலீஸ் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்தவர்களை வேட்டையாடினார்கள். சமீபத்தில் இவர்கள் பிடியில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் சிக்கினார்கள்.

மேலும் தனிப்படை போலீசார் மாநில தலைநகராக திருவனந்தபுரத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தம்பானூர் பஸ் நிலையம், ரெயில் நிலையத்திலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தம்பானூர் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் வனராஜ் (வயது 53). தமிழகத்தில் தேனி மாவட்டம் குண்டலூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் சோதனை செய்தபோது ஒரு பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வனராஜ் இந்த கஞ்சாவை தேனி, கம்பம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கியதும் அதை கேரளாவுக்கு கடத்தி வந்து இங்குள்ள கஞ்சா கும்பலுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கிச்செல்லும் கும்பல் அதை சிறு பொட்டலங்களாக்கி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து வனராஜிடம் கஞ்சா வாங்கி செல்லும் நபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Similar News