செய்திகள்

பிரமுக் சுவாமியின் இரங்கல் கூட்டத்தில் உணர்ச்சிப் பிழம்பாக மாறிய பிரதமர் மோடி

Published On 2016-08-17 03:15 GMT   |   Update On 2016-08-17 03:15 GMT
பிரமுக் சுவாமியின் இரங்கல் கூட்டத்தில் கண்கொத்திப் பாம்பாக நூற்றுக்கணக்கான கேமராக்கள் தன்னை குறிவைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி நெகிழ்ந்து உடைந்து, விம்மியபடி பேசும் வீடியோ பதிவை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அகமதாபாத்:

பிரமுக் சுவாமியின் இரங்கல் கூட்டத்தில் கண்கொத்திப் பாம்பாக நூற்றுக்கணக்கான கேமராக்கள் தன்னை குறிவைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி நெகிழ்ந்து உடைந்து, விம்மியபடி பேசும் வீடியோ பதிவை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பின் தலைவரும், ஆன்மிக குருவுமான பிரமுக் சுவாமி மஹராஜ்(95) வயது மூப்பின் காரணமாக குஜராத் மாநிலம், போடாத் மாவட்டத்தில் உள்ள சாரங்பூரில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பிரமுக் சுவாமி பாதிக்கப்பட்டிருந்தார். போடாத் மாவட்டம், சாரங்பூரில் உள்ள கோயிலின் ஒரு பகுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அவர் காலமானார்.

டெல்லி, அகமதாபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்து ஆலயங்களை நிர்மாணம் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

பிரமுக் சுவாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாரங்பூரில் உள்ள கோவிலில் இன்றுவரை (17-ம்தேதி) வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள இறுதிச்சடங்கிற்குப் பிறகு அவரது உடல் கோவில் வளாகத்தில் தகனம் செய்யப்படுகிறது.

பிரமுக் சுவாமியின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் சாரங்பூர் கோவிலுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த பிரமுக் சுவாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் அகமதாபாத் நகரை வந்தடைந்தார்.

சாரங்பூர் கோவிலுக்கு சென்ற அவர் பிரமுக் சுவாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்ற அவர், சுவாமியின் மறைவுக்கு புகழாஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு கூடியிருந்த சாமியார்கள் மற்றும் ஆன்மிகவாதிகளிடையே உரையாற்ற சென்றார்.

மைக்கை பிடித்த பிரதமர் மோடி, மறைந்துப்போன பிரமுக் சுவாமி உங்களுக்கு எல்லாம் குருவைப் போன்றவர், ஆனால், எனக்கு அவர் ஒரு தந்தையாக இருந்தவர் என்று கூறியபோது குரல் தழுதழுத்து உணர்ச்சிவசப்பட்டார்.

சுவாமியுடனான தனது தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் தனது 20 நிமிட பேச்சுக்கிடையில் பலமுறை கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சி பிழம்பாக காட்சியளித்தார். பல ஊடகங்களின் கேமராக்கள் கண்கொத்திப் பாம்பாக தன்னை குறிவைத்துள்ள நிலையில் பிரதமர் மோடி நெகிழ்ந்து உடைந்து, விம்மியபடி பேசிய அந்த வீடியோ பதிவை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வீடியோவைக் காண..,

https://www.youtube.com/watch?v=iUEhntg70_U




Similar News