கதம்பம்

முட்டையில் இருக்கு முழுமையான சத்து

Published On 2022-07-25 11:44 GMT   |   Update On 2022-07-25 11:44 GMT
  • எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார்.
  • 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், “முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்” என்றார்.

நாம் உண்ணும் உணவுத்தட்டில் முக்கியமான தேவையாக இருக்கும் ஊட்டச்சத்து "புரதச்சத்து" எனும் ப்ரோட்டீன்கள்.

பவர் தரும், எனர்ஜி தரும், வளர்ச்சி தரும் இத்தகைய ப்ரோட்டீனை உணவில் எப்படி எளிதாக அடைவது?

ப்ரோட்டீன் தேவையை அடைய உதவும் முக்கியமான எளிதான ஒரு உணவு உண்டெனில் அது முட்டை தான். முழுமையான புரதச்சத்து நிரம்பிய உணவு தான் முட்டை.

முட்டையில் இவையன்றி வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி2 , பி6,பி12. துத்தநாகம் செம்பு என்று மனிதனுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் தாதுஉப்புகளும் இருக்கின்றன.

முட்டையை வெறும் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணும் வழக்கம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனால் அது தவறான போக்காகும். நம் உடலுக்குத் தேவையான புரதம் முழு முட்டையில் தான் முழுமையாக வந்து சேரும். கொழுப்புக்கு பயந்து அஞ்சி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டியதில்லை.

தினமும் நான்கு முதல் பத்து முட்டைகள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழும் பலரை நான் அறிவேன். எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார். 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், "முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்" என்றார்.

நாளொன்றுக்கு ஒருவர் மூன்று முட்டைகளை எடுக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன், கட்டாயம் அந்த முட்டைகளை தனியாக செய்து தான் சாப்பிட வேண்டும். முட்டை தோசை, முட்டை பரோட்டா என்று சாப்பிடக்கூடாது. ஆனால் நமக்கு பிடித்த மாதிரி அவித்த முட்டை, ஆம்லெட், பொடிமாஸ் என்று சாப்பிடலாம். முட்டைகளை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்பதேசிறந்தது.

குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததில் இருந்து ஒரு முட்டையைக் கொடுத்து பழக்கலாம். முதலில் மஞ்சள் கருவில் ஆரம்பித்து பிறகு ஒரு வயதுக்குப் பிறகு வெள்ளைக்கருவும் சேர்த்துக் கொடுக்கலாம்.

ஒரு வயதுக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை அவர்கள் சாப்பிட்டாலும் தடுக்க வேண்டியதில்லை. ஈவினிங் ஸ்நாக்காக ஒரு ஆம்லெட் போட்டுக்கொடுக்கலாம். இது சாக்லேட், பப்ஸ், பர்கரை விடவும் சிறந்தது.

முட்டைகளை உண்டால் பலருக்கு வாயுக்குத்து வருகிறது. அபான வாயு அடிக்கடி வெளியேறுகிறது என்று கம்ப்ளய்ண்ட் செய்வார்கள். அதற்குத்தான் முன்பே கூறினேன், கட்டாயம் முட்டைகளை தனி உணவாகவே உண்ண வேண்டும். முட்டையை சோறுடனோ, முட்டை தோசை என்றோ, முட்டை பரோட்டா என்றோ உண்ணக்கூடாது.

என்னை சந்திக்கும் நீரிழிவு நோயர்களுக்கு ஒரு வேளை உணவாக முட்டைகளை பரிந்துரை செய்து வருகிறேன். நான்கு முட்டைகளை முழுதாக உண்டாலும் ரத்த சர்க்கரை 200-ஐத் தாண்டாது. காரணம் முட்டைகளில் கார்போஹைட்ரேட் கிடையாது.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப்பொருள் மிக மிக குறைவாகவே இன்சுலின் சுரப்பை தூண்டும். மிக மிக குறைவாகவே ரத்த க்ளூகோஸ் அளவுகளை ஏற்றும்.

நீரிழிவு நோயர்களுக்கு இதனால் மூன்று நன்மைகள். முதல் நன்மை ரத்த சர்க்கரை ஏறாமல் இருப்பது. இரண்டாவது நன்மை நிறைவான புரதச்சத்து கிடைப்பது. மூன்றாவது நன்மை நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் பி12 கிடைப்பது.என்னை சந்திக்கும் பொருளாதாரத்தில் எளியோர்க்கும் சரி, வலியவர்களுக்கும் சரி.. நான் பரிந்துரைக்கும் புரதம் சார்ந்த உணவு "முட்டை" தான். தினமும் மூன்று முட்டைகள் எடுத்தால் போதும். அவர்களுக்கு வேறு ஹெல்த் ட்ரிங்குகளின் அவசியம் ஏற்படுவதில்லை.

- டாக்டர் ஃபரூக் அப்துல்லா

Tags:    

Similar News

நாத்தனார்
அருமருந்து