உள்ளூர் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை- கருர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-06-29 09:43 GMT   |   Update On 2022-06-30 09:52 GMT
  • சிறுமி திருமணம் குறித்து கேட்கவே, உடனே சின்னப்பனையூரில் உள்ள கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
  • போகசோ, சிறார் திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புரசம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது25). ஜேசிபி ஆபரேட்டர். இவரது உறவினரான 13 வயது சிறுமி அவரது வீட்டில் தங்கி திருச்சியில் படித்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஜன. 15ம் தேதி சிறுமிக்கு பிறந்த நாள் வந்துள்ளது.

சிறுமிக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்த சேகர், அவரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2 மாதங்கள் கழித்து சேகர் வெளிநாடு செல்வதாகச் சிறுமியிடம் தெரிவித்துள்ளார். சிறுமி திருமணம் குறித்து கேட்கவே, உடனே சின்னப்பனையூரில் உள்ள கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிறுமியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

கடந்த 2020 நவம்பரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சேகர் உன்னை திருமணம் செய்துக் கொண்டு விட்டேனே எனக்கூறி சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்தாண்டு நவ. 11ம் தேதி திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சம்பவம் குறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ, சிறார் திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.நசீமாபானு அளித்த தீர்ப்பில், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, சிறுமியைக் கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, சிறார் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

Tags:    

Similar News