செய்திகள்
ஸ்டேன் சுவாமி

கால் கட்டப்பட்ட நிலையில் இருப்பது ஸ்டேன் சுவாமி என கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-07-07 05:24 GMT   |   Update On 2021-07-07 05:24 GMT
கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. சமூக செயற்பாட்டாளரான இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்தார். 84 வயதான இவர் 2020 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இடையில் ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஜூலை 5 ஆம் தேதி மதியம் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், வயதான முதியவரின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் வைரல் புகைப்படத்தில் இருப்பது பாதிரியார் ஸ்டேன் சுவாமி என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தில் இருப்பது பாதிரியார் ஸ்டேன் சுவாமி இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது கொலை குற்றவாளியான பாபுராம் பல்வான் சிங் ஆகும். இவர் உத்திர பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News