செய்திகள்
விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
சமீபத்திய போராட்டத்தின் போது போலீசாரின் உண்மை முகம் வெளிப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூன் 26 ஆம் தேதி ராஜ் பவனை நோக்கி செல்ல முயன்றனர். இந்த சம்பவத்தின் போது விவசாயிகள் மற்றும் சண்டிகர் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. விவசாயிகளை தடுக்க போலீசார் தண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகளவு வலம்வரத்துவங்கின. சிலர் கடுமையான கருத்துக்களுடன் புகைப்படங்களையும் இணைத்து பதிவுகளை வெளியிட்டனர். அப்படியாக இந்த போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி, ஆறு பெண் காவலர்கள் மூதாட்டி ஒருவரை வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் ஆகஸ்ட் 2015 மாதத்தில் பஞ்சாபின் பாட்டியாலா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கும் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதே தகவலை உறுதிப்படுத்தும் செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.