செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-08-09 21:41 GMT   |   Update On 2019-08-09 21:41 GMT
வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. பணத்தை நம்பி வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. பெற்றது மோசமான, மோசடியான வெற்றி. கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2 அல்லது 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் வாங்கினார்கள்.

அப்பாவி மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை பெற்றனர். ஆனால் இந்த முறை ஏமாற்ற முடியவில்லை. கிளுகிளுப்பு காட்டி மக்களை ஏமாற்றும் செயல் எடுபடவில்லை.

இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தேறாது என்ற நிலைதான் உள்ளது. 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துக்கு ரூ.125 கோடி செலவு செய்தது ஒரு வெற்றியா?. மக்கள் மனதில் அ.தி.மு.க. முழுமையாக வெற்றி பெற்று உள்ளோம்.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட மாற்றம் என்றால் தி.மு.க. தேய் பிறையாக போய்க்கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. வளர்பிறையாக உள்ளது. 2021-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலருவதற்கான நல்ல அறிகுறியைத்தான் வேலூர் மக்கள் அளித்து உள்ளனர்.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது. கூட்டணி தர்மத்தின்படி எல்லா கட்சியினரும் வந்து உழைத்தார்கள். எல்லோருடைய உழைப்பால்தான் அ.தி.மு.வுக்கு மகத்தான வாக்குகள் கிடைத்தது.

வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது. அடுத்தமுறை நிச்சயமாக பழம் பாலில் விழும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News