செய்திகள்
கேஎஸ் அழகிரி

முத்தலாக் மசோதாவில் அதிமுக இரட்டை வேடம் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-07-31 08:02 GMT   |   Update On 2019-07-31 08:02 GMT
அதிமுக எப்படி இரட்டை தலைமையில் இயங்குகிறதோ, அதைப் போலவே முத்தலாக் மசோதாவிலும் இரட்டை வேடம் போட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முத்தலாக் தடை மசோதா என்று அழைக்கப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முஸ்லிம் மதத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அது கிரிமினல் குற்றமாகி, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

விவாகரத்து செய்யப்படும் இந்து அல்லது கிறிஸ்துவப் பெண்களின் கணவர்களுக்கு சிறை தண்டனை கொடுக்காதபோது, முத்தலாக் சொல்லும் ஆண்களுக்கு மட்டும் சிறை தண்டனை கொடுப்பது நியாயம் தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட பிறகு கணவன் சிறையில் அடைக்கப்பட்டால் மனைவியின் வாழ்வாதாரத்தை யார் பாதுகாப்பது? இந்த கேள்விக்கு இதுவரை பா.ஜ.க. பதில் கூறவில்லை.

பண்டித நேரு வகுத்த மதச்சார்பற்ற கொள்கையின்படி, ‘நம்முடைய அரசாங்கம் ஒரு மதச்சார் பற்ற அரசாங்கம். எல்லா குழுவினருக்கும் சம வாய்ப்பு அளிக்கும். அரசமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் வழங்கியிருக்கிறது. இந்த சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்கிற வகையில் தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தை பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிறது.

மக்களவையில் 2019-ல் 303 உறுப்பினர்களை பெற்றிருக்கிற பா.ஜ.க.வில் ஒருவர் கூட சிறுபான்மை சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காத நிலையில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது? சிறுபான்மை சமுதாயத்தினர் பாராளுமன்றத்தில் நுழையக் கூடாது என்பதை பதுங்கு திட்டமாக வைத்து பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா?

முத்தலாக் மசோதாவை மக்களவையில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்திருக்கிறது. இது எதிர்த்து வாக்களிப்பதை விட கொடுமையானதாகும். வெளிநடப்பு செய்வதன் மூலம் மறைமுகமாக பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க. உதவி செய்திருக்கிறது. ஆனால், வேலூர் மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களவையில் ஒரு நிலையையும், மாநிலங்களவையில் எதிர் நிலையையும் அ.தி.மு.க. எடுத்து இரட்டை வேடம் போட்டிருக்கிறது.

அ.தி.மு.க. எப்படி இரட்டை தலைமையில் இயங்குகிறதோ, அதைப் போலவே முத்தலாக் மசோதாவிலும் இரட்டை வேடம் போட்டிருக்கிறது. இத்தகைய இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க.விற்கு உரிய பாடம் புகட்டுவதற்கு அருமையான வாய்ப்பு வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Tags:    

Similar News