திருவையாறு அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல்
திருவையாறு:
தஞ்சை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சை பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலைச்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு பிரான்சிஸ் ஆகியோர் திருவையாறை அடுத்த ஈச்சங்குடி மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அந்தணர்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (வயது24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் வைத்திருப்பதும் தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச் செல்வம் முன்னிலையில் திருவையாறு தாசில்தார் இளம்மாருதியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார். #Loksabhaelections2019