செய்திகள்

திமுக பிரமுகர்களிடம் சிக்கிய ரூ.11 கோடி பணம் பற்றி அதிரடி விசாரணை

Published On 2019-04-02 11:49 IST   |   Update On 2019-04-02 14:12:00 IST
காட்பாடியில் திமுக பிரமுகர்களிடம் ரூ.11 கோடி பணம் சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ITRaid #DMK

வேலூர்:

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வேலூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் பணப் பரிமாற்றம் செய்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார்கள் வந்தன. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடப்பதாக தெரிய வந்ததால் அது பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது சில ஆவணங்களையும், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

காட்பாடி அருகே கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள துரைமுருகன் குடும்பத்தினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் திடீரென மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்போது தி.மு.க. விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், பெரிய துணிப் பைகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு பணக்கட்டிலும் ஊரின் பெயர், வார்டு நம்பர் எழுதப்பட்டு இருந்தது.

துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீட்டில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் அந்த பணக்கட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அந்த பண கட்டுகள் எண்ணப்பட்டன.

இன்று அதிகாலை பணம் எண்ணும் பணி முடிந்தது. அப்போது ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் புத்தம் புது நோட்டுகளாக இருந்தன.

வருமான வரித்துறை வசம் உள்ள அந்த ரூ.11.48 கோடியாருக்கு சொந்தமானது என்பதை இதுவரை உறுதி செய்ய இயலவில்லை. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தினார்க்ள. ஆனால், “பிடிபட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

 


ஆனால் துரைமுருகன் குடும்பத்தினருக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் இருந்து அந்த பணம் சிமெண்ட் குடோனுக்கு கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். என்றாலும் அந்த பணத்துக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை தீவிரமாகியுள்ளது. முதல் கட்டமாக பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி விஜயா இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களிடம் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது என்று விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்படும். தேவைப்பட்டால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பொதுவாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு இடத்தில் சோதனை நடத்துகிறார்கள் என்றால் எந்த ஒரு சிறு தகவலையும் வெளிப்படுத்த மாட்டார்கள். என்ன ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை கூட யாரிடமும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நேற்று தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் நடந்த சோதனை விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

குறிப்பாக சிமெண்ட் குடோனில் சாக்குமூட்டைகள், அட்டை பெட்டிகளில் இருந்த கட்டு கட்டான பணம் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் பரவின. அந்த பணம் பற்றிய தகவலை பெற வேண்டும் என்பதற்காகவே வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு அந்த காட்சிகளை கசிய விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. இதையடுத்து வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ரூ.11.48 கோடியில் 80 சதவீத நோட்டுகள் புத்தம் புதியதானவை. எனவே அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள சீரியல் எண்களை வைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி எந்த கால கட்டத்தில் அச்சடிக்கப்பட்டன? அவை எந்த நகர வங்கிகளுக்கு அனுப்பப்பட்டன? என்று விசாரணை நடக்கிறது.

ரூபாய் நோட்டு எண்கள் மூலம் எந்த வங்கியில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தெந்த வங்கி கணக்குகளில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும் என்றார்.

மேலும் பணம் எடுக்கப்பட்ட வங்கி விவரம் தெரிந்த பிறகு அந்த வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த பணக்கட்டுகளை வாங்கி சென்ற நபர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

துரைமுருகனின் ஆதரவாளர்கள் அனைவரிடமும் 2 நாட்களுக்குள் இந்த விசாரணையை முடித்து விட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அதன் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி குறித்து வருமான வரித்துறை சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும்.

அந்த அறிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அதன்பேரில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள். அதன் பிறகே வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? அல்லது திட்டமிட்டப்படி நடக்குமா? என்பது தெரிய வரும். #ITRaid #DMK

Similar News