செய்திகள்

மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய-மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published On 2019-04-01 08:51 IST   |   Update On 2019-04-01 08:51:00 IST
மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும் என்று ஆம்பூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin
ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து நேற்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாராளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தல், மத்தியில் உள்ள மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காகவும், 18 சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல், தமிழகத்தில் உள்ள எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காகவும் நடைபெறும் தேர்தல் ஆகும்.

நமது உடலில் தேவையில்லாத கட்டி வந்தால் அதனை வெட்டி எடுக்க வேண்டும். இல்லையெனில் உடலுக்கு கெடுதல். அதேபோல் மக்களுக்கு பயன்படாத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும். வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.



பிரதமராக உள்ள நரேந்திர மோடி மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை தந்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதாக கூறினார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் அதையும் செய்யவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால் எதுவும் தரவில்லை. மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆட்சி ஆரம்பித்தபோது அடிக்கல் நாட்டிவிட்டு 5 ஆண்டுகளுக்குள் திறந்து இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி முடியும் நிலையில் அடிக்கல் நாட்டி உள்ளார். மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனை எப்போது கட்டி திறப்பார்கள் என்று தெரியவில்லை. பிரதமர் மோடியை அனைவரும் இரும்பு மனிதர் என்று சொல்கிறார்கள். அவர் இரும்பு மனிதர் அல்ல, கல் மனிதர் தான்.

அதேபோல் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ. சோதனை, கோடநாடு கொலை வழக்கு, அனைத்து துறையிலும் ஊழல், லஞ்சம் ஆகிய பிரச்சினைகள் காரணமாகவும், வழக்குகளில் இருந்து காப்பாற்றி கொள்ளவும், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் கட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து பதவிக்காக சரண் அடைந்துள்ளார். அதனால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணியும் அமைத்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை பற்றியும் சிந்திக்கவில்லை, நாட்டை பற்றியும் சிந்திக்கவில்லை. தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி உள்ளார்.

குறிப்பாக மிலாது நபிக்கு அரசு விடுமுறை, வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நல ஆணையம், வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம், தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் ஆகியவை தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன செய்யபோகிறோம் என்று பாராளுமன்றத்துக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூர் தொகுதிக்கு சுற்றுச்சாலை, புறவழிச்சாலை, பேரணாம்பட்டு, மாதனூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #MKStalin

Similar News