செய்திகள்
பணத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட தனியார் வங்கி வாகனம்.

தனியார் வங்கி பணம் ரூ.1 கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published On 2019-03-18 09:31 GMT   |   Update On 2019-03-18 10:53 GMT
தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் தனியார் வங்கி பணம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ரூ.1 கோடியே 4 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊழியர்கள் கூறும்போது, “அடையாறு ஆக்சிஸ் வங்கியில் இருந்து இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறினர்.

மேலும் அதற்கான வங்கி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சமயத்தில் வங்கி பணம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் சிறப்பு அனுமதி கடிதம் இல்லாததால் வங்கி பணம் ரூ.1.04 கோடியை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஆக்சிஸ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி சார்பில் சிறப்பு அனுமதி பெற்று சான்றிதழ் கொடுத்ததும் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

Tags:    

Similar News