செய்திகள்

தேமுதிகவுக்கான கூட்டணி கதவை நாங்கள் மூடவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-03-07 13:42 IST   |   Update On 2019-03-07 13:42:00 IST
பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவு திறந்திருப்பதாகவும், தேமுதிகவுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #MinisterJayakumar #LSPolls
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும், கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அநேகமாக நாளை கூட்டணி ஒப்பந்தம் ஏற்படும் என தெரிகிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, திமுகவுடனும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். இந்த தகவல்களை துரைமுருகன் வெளியிட்டது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

தேமுதிகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. எங்களுக்கான கூட்டணி கதவை மூடவில்லை. தேமுதிகவுக்காக காத்திருக்கிறோம். அதிமுக எனும் போயிங் விமானத்தில் ஏறிய அனைவருக்கும் சீட் கொடுத்துவிட்டோம். தேமுதிக வந்தால் டெல்லி புறப்பட்டு விடும். எனவே, அதிமுகவுடன் கூட்டணியா, இல்லையா? என்பதை இனி முடிவு செய்யவேண்டியது தேமுதிக தான்.



கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சு நடத்தியதை திமுக வெளியே சொல்லியிருக்க கூடாது. அரசியல் நாகரிகமின்றி திமுக வெளிப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #LSPolls
 

Similar News