உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே பெண் கேட்டு வந்த வாலிபர் அடித்துக்கொலை- தாய்மாமன் கைது

Published On 2023-05-11 04:54 GMT   |   Update On 2023-05-11 04:54 GMT
  • நாகபிரபு தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
  • தாய்மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி அருகே உள்ள தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகவேல் மகன் நாகபிரபு (வயது 27). விவசாயி. இவர் தனது தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் அவருக்கு நாகபிரபுவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இருந்தபோதும் வெளியே வரும் சமயங்களில் தனது மாமன் மகளை கையை பிடித்து இழுத்து நாகபிரபு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே இது குறித்து தனது தந்தையிடம் அவர் கூறினார்.

நேற்று தனது மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த கருப்பசாமி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகபிரபுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகபிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News