கோப்பு படம்.
கொடைக்கானலில் போதை காளான் விற்ற வாலிபர் கைது
- கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
- கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கும்பலாக செயல்படும் இவர்கள் நூதன முறையில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான், கஞ்சா சப்ளை செய்து வந்தனர்.
போலீசாரின் தீவிர நடவடிக்கையால் இது கட்டுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் போதை காளான் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் ஜெகநாதன் என்பதும், சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஜெகநாதனை கைது செய்து அவரிடம் இருந்து போதை காளானை பறிமுதல் செய்தனர்.
போதை காளானை எங்கிருந்து வாங்கினார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.