உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டையில் கார் மோதி கூலித்தொழிலாளி பலி
- தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள தோப்பு பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தூரபாண்டி (வயது 32). இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு நகை கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரும் தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் காளிதாஸ் ( 24 ) ஆகிய 2 பேரும் நிலக்கோட்டையில் இருந்து தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செந்தூரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளிதாஸ் பலத்த காயங்களுடன் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.