உள்ளூர் செய்திகள்

உடுமலையில் மனநிலை பாதித்த பெண்ணை கொன்ற சைக்கோ வாலிபர் கைது

Published On 2022-12-04 07:25 GMT   |   Update On 2022-12-04 07:25 GMT
  • நேற்று முன்தினம் அதிகாலை பஸ் நிறுத்தத்தில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
  • தனலட்சுமி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புக்குளம் நடராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 40). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனலட்சுமி அடிக்கடி புக்குளம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் படுத்து தூங்கி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பஸ் நிறுத்தத்தில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனை பார்த்தவர்கள் உடுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனலட்சுமி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரணையில் தனலட்சுமியை கொலை செய்தது உடுமலை ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 30) என்பது தெரியவந்தது. சைக்கோவான இவர் ஏற்கனவே ஒரு மூதாட்டியை கொலை செய்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் தனலட்சுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News