மின்கம்பத்தில் கார் மோதி பெண் பலி
- கட்டுபாட்டை இழந்து கார் மின்கம்பத்தில் மோதியது.
- மருத்துவ மனைக்கு கொண்டு போகும் வழியிலேயே உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஏ.வெள்ளாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி இளங்கனி (வயது50). இவர்களது உறவினர்களான தினேஷ், அவரது மனைவி அருணா உள்பட 5 பேரும் நேற்று காரில் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மொரப்பூர் அடுத்த கடம்பரஅள்ளி பஸ்நிறுத்தம் பகுதியில் வந்த போது கட்டுபாட்டை இழந்து கார் மின்கம்பத்தில் மோதியது.
இதில் இளஞ்கனி, அருணா ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இளங்கனியை சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.