மல்லிகை பாறையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை.
பெரும்பாறை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த ஒற்றை யானை
- மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது.
- காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு காபி தோட்டத்தை சேர்ந்த விவசாயிகளான கோவிந்தராஜ், பூபதி, காந்தி ஆகியோருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு பயிர்களை நாசம் செய்தது. இன்று காலை மல்லிகைபாறை வழியாக தார்சாலைக்கு வந்து சந்தனச்சோலை வனப்பகுதிக்குள் சென்றது.
காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.