உள்ளூர் செய்திகள்

மர்மமான முறையில் இறக்கும் காட்டு பன்றிகள்

Published On 2022-11-01 09:36 GMT   |   Update On 2022-11-01 09:36 GMT
  • நோய் தொற்றா? அல்லது விஷம் வைத்து கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.
  • பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம்.

குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இவை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.

இவைகளில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வந்தது காட்டுப் பன்றிகள். ஏனெனில் இவைகள் விவசாய நிலங்களில் இருக்கும் பொருட்களை பெரிதும் சேதப்படுத்தி வந்தது. மேலும் காட்டு பன்றிகள் மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வந்தது. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அதிக அளவு மர்மமான முறையில் இறந்து வருகிறது. இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளிலேயே அதிக அளவு இறந்து வருவதால் அவைகளுக்கு ஏதேனும் நோய் தோற்று ஏற்பட்டு இறந்ததா? அல்லது கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. மனிதர்களுக்கும் இவைகளால் ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Tags:    

Similar News