குறுவை வயல்களில் நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு
- கல்லணை கால்வாய் பகுதிகளுக்கு நீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.
- தஞ்சை வண்ணாரப்பேட்டை, சூரக்கோட்டை, காட்டூர், வடுவூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
இதையடுத்து குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், அணையின் நீர் இருப்பு குறைந்த காரணத்தினால் பாசனத்திற்கு முறை பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் கல்லணை கால்வாய் பகுதிகளுக்கு நீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் முறை பாசனத்தின் படி நாளை (திங்கள் கிழமை) முதல் நீர் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மண்டலம் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் எம். சுப்பிரமணியன் இன்று கல்லணை கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை வண்ணாரப்பேட்டை, சூரக்கோட்டை, காட்டூர், வடுவூர், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பவழக்கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், மணிகண்டன், உதவி பொறியாளர்கள் சேந்தன், சூரியபிரகாஷ், நிஷாந்த், அறிவரசு ஆகியோர் உடன் இருந்தனர்.