உள்ளூர் செய்திகள்

சீர்காழி புறவழிச்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்

Published On 2023-04-14 09:44 GMT   |   Update On 2023-04-14 09:44 GMT
  • சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகளை சுறுக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
  • பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.

சீர்காழி:

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள், குடியிருப்புகள் கட்டடங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சீர்காழி புறவழிச் சாலையில் எருக்கூர் ,கோயில் பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகள் குறுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

ஆனால் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து போதிய எச்சரிக்கை பலகை திசை மாறி செல்லும் அறிவிப்புபலகை, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.

இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

தொடரும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் ஆகியவற்றை போதிய அளவு அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News