உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

Published On 2022-06-29 09:52 GMT   |   Update On 2022-06-29 09:52 GMT
  • பெண்ணை வழிமறித்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
  • பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள மிட்டபள்ளி பகுதியை சேர்ந்த கணவன்-மனைவிக்கு இடையே நேற்றிரவு குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் அந்த பெண் கோபித்து கொண்டு கை குழந்தையுடன் லட்சுமி கொட்டாய் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நாட்றம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது28) என்பவர் அந்த பெண்ணை வழிமறித்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் நான் லட்சுமி கொட்டாய் கிராமத்திற்கு செல்கிறேன் என்றார். உடனே அந்த வாலிபர் என் பைக்கில் ஏறுங்கள் நான் உங்களை கொண்டு விடுகிறேன் என்றார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

ஆனாலும் அந்த வாலிபர் பைக்கை நிறுத்திவிட்டு வந்து அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை எல்லாம் கூறி அழுதார்.

இது குறித்து அந்த பெண் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.


Similar News