- ராஜபாளையம் அருகே முளைக்கொட்டு திருவிழா நடந்தது.
- ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் ஏராளமான நெசவுத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஆடி மாதத்தில் முளைக்கொட்டு திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு சத்திரப்பட்டி புது தெரு, வடக்குத் தெரு, நடுத்தெரு, கீழ, மேல் பகுதி போன்ற பகுதிகளில் முளைக் கொட்டு திருவிழா நடந்தது. செல்வமுளை மாரியம்மன், யோக மாரியம்மன்,முளை மாரியம்மன் போன்ற அம்மன் கோவிலுக்கு முளைப்பாரிகளுடன் கும்மியடித்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
மதியம் முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக சென்றனர். அனைத்து கிராமங்கள் வழியாக அனைத்து தெருக்களும் சுற்றி முளைப்பாரிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர். நத்தம்பட்டி சாலையில் உள்ள துரைமடம் அருகே உள்ள கிணற்றில் மாலை வரை முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு அனைத்து மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.