பெட்டிக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
- ராஜபாளையம் அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
- என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் முடங்கியார்ரோடு, பி.எஸ்.கே.மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீராசிலிங்கம் (வயது40). தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு பெட்டிக்கடையை பூட்டி விட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது பெட்டிக்கடை முன்புறம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் தீயை அணைத்தார்.
பின்னர் அங்கு பார்த்த போது பாட்டிலில் திரி பொருத்தப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து பெட்டிக்கடை மீது வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நீராசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.