காரியாபட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கினர்.
வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு
- வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தார்.
- 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வரும் காலை உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.
பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தும், சமையலறை கூடத்திற்கு சென்று உணவு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஜோகில்பட்டி கிராமத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இந்த திட்டத்தின் பயன்கள், மருத்துவர்களின் வருகை, சிகிச்சை முறை, மருந்துகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினர்.
இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்ய இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினர்.
காரியாபட்டி ஊராட்சி சுரபி உண்டு, உறைவிடப் பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியை வழங்கினார்கள்.
மேலும் 50 மாணவர்க ளுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர், வளையங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரதமரின் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம்- 35 சதவீதம் மானியத்தில் பெறப்பட்ட கடனுதவி மூலம் செயல்பட்டு வரும் மோனா சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், சிறுதானிய மற்றும் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.