உள்ளூர் செய்திகள்

ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-18 08:10 GMT   |   Update On 2023-08-18 08:10 GMT
  • ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
  • 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

விருதுநகர்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான தையல் தொழிலில் முன் அனுபவமும் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10 நபர்கள் கொண்ட குழுவாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:-

குறைந்தபட்சம் வயது 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்.

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பி னைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News