உள்ளூர் செய்திகள்

பட்டாசு-திரி வைத்திருந்த 8 பேர் கைது

Published On 2022-10-05 09:02 GMT   |   Update On 2022-10-05 09:02 GMT
  • சிவகாசி அருகே பட்டாசு-திரி வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

திருத்தங்கல் அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). எளிதில் தீப்பற்றக்கூடிய திரிகளை வைத்திருந்ததாக திருத்தங்கல் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி நாராயணபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவை வேலப்பர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (39) என்பவர் அனுமதியின்றி 10 பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.

சிவகாசி எம்.மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு குழாய்களை வைத்திருந்ததாக வீரபாகு, ராஜகோபால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,200 பட்டாசு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் பட்டாசு திரி, பட்டாசுகளை வைத்திருந்ததாக கீழகோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இளையராஜா, கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, திருத்தங்கல்லைச் சேர்ந்த பவுன்தாய், முனியம்மாள் ஆகிய 4 பேரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News