உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனத்தினர் மீது கிராம மக்கள் புகார்

Published On 2023-02-18 09:42 GMT   |   Update On 2023-02-18 09:42 GMT
  • கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
  • நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

போச்சம்பள்ளி பகுதியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 1,200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தியது. அதில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் மீதமுள்ள நிலங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதாரளப்பட்டி, போக்கம்பட்டி பகுதியில் உள்ள 125 ஏக்கர் தனி நபர்களின் நிலங்கள், மற்றும் வீடுகளை தனியார் நிறுவனர் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்கிறார்கள்.

நில புரோக்கர்களை வைத்து பேசுகிறார்கள். கடந்த 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் அந்த நிலங்களை விற்க முடியாது எனக் கூறியும் நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி நிலங்களை விற்குமாறு வற்புறுத்துகின்றனர். எங்கள் வாழ்வாதாரங்களை பறிக்க முயலும் கம்பெனிகளின் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக விசாரித்து, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் கம்பெனிகள் அத்துமீறி வாங்க அதிகாரம் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News