உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் 4-வது தடவை ரத்து

Published On 2022-11-23 15:17 IST   |   Update On 2022-11-23 15:17:00 IST
  • பயணிகள் கடும் அவதி
  • 5 பேருக்கு கடை ஒதுக்குவது சம்பந்தமாக முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மீதமுள்ள 68 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்து வருகின்றனர்.

ஏற்கனவே 3 முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இன்று புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறையும் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 12 பேர் தங்களுக்கு கடைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி ஒருவர் மட்டுமே மாநகராட்சியில் பணம் செலுத்தினார். மற்றவர்கள் பணம் செலுத்த வில்லை. அவர்களில் மீண்டும் 8 பேர் கடைகள் ஒதுக்குவது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் 4 பேர் ஏற்கனவே மாநகராட்சிக்கு ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதனை அவர்கள் கோர்ட்டில் மறைத்து கடைகள் ஒதுக்குமாறு தெரிவித்தனர்.

வாடகை பாக்கி குறித்து மாநகராட்சி சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடை ஒதுக்குவது ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் இன்னும் 5 பேருக்கு கடை ஒதுக்குவது சம்பந்தமாக முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை. அவர்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும். அதற்கு பிறகு கடைகள் ஏலம் நடைபெறும் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றனர்.

பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் ‌பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News