வேலூரில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
- வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
- மழை பெய்ததால் விளைச்சல் பாதிப்பு
வேலூர்:
வேலூர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. ஆந்திரா கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் அங்கு தக்காளி விலை உயர்ந்துள்ளது.மேலும் வேலூர் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களாக, மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலையும் உயா்ந்துள்ளது.
விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது.
பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
இன்று வேலூர் மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.40 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில இடங்களில் தரம்குறைந்த தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.